இன்றைக்கு மருத்துவத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது பிசியோதெரபி (Physiotherapy) எனப்படும் `இயன்முறை மருத்துவம்’. சிற்றூர்களில் கூட `பிசியோதெரபி மையங்கள்’ ஆரம்பிக்கபட்டுவிட்டன. பிசியோதெரபி என்றால் என்ன? எலும்புு, மூட்டு மற்றும் தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டால், அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் சிகிச்சையாகும். ஊசி, மருந்துகளைப் பயன்படுத்தாமல் உடற்பயிற்சி, தெரபியூடிக் மசாஜ், வெப்ப சிகிச்சை, மின் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு வழிமுறை. உடலில் அடிபட்டால் காயத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், பாதிப்பிலிருந்து மீளவும் இது உதவுகிறது.
பிசியோதெரபி பிரிவுகள்
- எலும்பு மற்றும் மூட்டு (Orthopedic)
- நரம்பியல் (Neurology)
- இதயம் மற்றும் சுவாசம் (Cardio & Respiratory)
- விளையாட்டு (Sports)
- கை (Hand Conditions)
- சமுதாயம் (Community)
- குழந்தைகள்நலம் (Pediatrics)
- முதியோர்நலம் (Geriatric)
- மகப்பேறியல் (Obstetrics and Gynaecology)
- உடல் இயக்கவியல் (Biomechanics)
- மறுவாழ்வு (Rehabilitation)
1.எலும்பு மற்றும் மூட்டு (Orthopedic Physiotherapy)
எலும்பு மற்றும் மூட்டு பிசியோதெரபி பிரிவின் கீழ் வரும் பிரச்னைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
* எலும்பு முறிவு
உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டால், எலும்பு முறிவு மருத்துவர் (Orthopedician), அறுவை சிகிச்சை அல்லது மாவுக்கட்டு போட பரிந்துரைப்பார்கள். அதன் பிறகுதான் பிசியோதெரபிஸ்ட்டின் பணி தொடங்குகிறது. மாவுக்கட்டைப் பிரித்த பிறகு, தசைகளில் ஏற்படும் பிடிப்புகளைச் சரிசெய்யவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தசைகள் இழந்த இயக்கம் மற்றும் வலிமையைத் திரும்பப் பெறவும் பிசியோதெரபி பெரிதும் உதவுகிறது.
* எலும்புத் தேய்மானம்
வயோதிகம் மற்றும் அதிக இயக்கம் காரணமாக எலும்பு, மூட்டுகள் தேய்மானம் அடையும். அதனால் ஏற்படும் வலியைப் போக்கவும், தேய்மானத்தைச் சரிசெய்யவும் பிசியோதெரபி அவசியம். இந்தச் சிகிச்சையைத் தொடர்ந்து அளித்தால்தான் பாதிக்கப்பட்ட மூட்டுகளை மீண்டும் செயல்படவைக்க முடியும்.
* தசை மற்றும் தசைநார்
உடலில் தசைப் பிடிப்பு, சுளுக்கு மற்றும் தசைநார் பாதிப்புகளைச் சரிசெய்யவும், வலியைக் குறைக்கவும் பிசியோதெரபியில் ஐஎஃப்டி சிகிச்சை (Ultrasound Therapy and Interferential Therapy) அளிக்கப்படுகிறது. இந்த முறையில் சிகிச்சையளிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட தசை மற்றும் தசைநார்களை மீண்டும் அதே வலிமையுடன் செயல்பட வைக்கலாம்.
எலும்புத் தேய்மானத்தைத் தவிர்க்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். சூரிய வெளிச்சத்தில் உடல்படும்படி நடக்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கீழே விழுந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.
2. நரம்பியல் (Neurology)
பிறவி (Congenital Disorders), விபத்து மற்றும் மூப்பு காரணமாக ஏற்படும் நரம்பியல் பிரச்னைகள் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையே நரம்பியல் பிசியோதெரபி ஆகும்.
நரம்பு சார்ந்து ஏற்படும் நோய்கள்
மூளை முடக்குவாதம், தசைநார் தேய்வு (Muscular Dystrophy) போன்ற நரம்பு தொடர்பான பிரச்னைகள் பிறவியிலேயே ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மூளைக்குச் சரிவர ரத்தம் செல்லாவிட்டால், Cerebrovascular Accident எனப்படும் CBA ஏற்படும். இதன் தொடர்ச்சியாக பக்கவாதம் ஏற்படும்.
விபத்து மற்றும் காசநோயால் தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்படும்போது, இரண்டு கால்களும் செயலிழந்துவிடும். உடலிலிருக்கும் குறிப்பிட்ட சில நரம்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. அப்படி பாதிக்கப்படும் சூழலில் முகப் பக்கவாதம் ஏற்படும். மூப்படைவதால் நரம்புத் தளர்ச்சி, நரம்புத் தேய்மானம் போன்றவை ஏற்பட்டு, `டிமென்ஷியா (Dementia) எனப்படும் ஞாபகமறதி, அல்சீமர் (Alzheimer’s Disease) மற்றும் பார்கின்சன் நோய் (Parkinson’s Disease) போன்றவை ஏற்படும்.
சிகிச்சைகள்
- சமநிலைப் பயிற்சி (Balance Training)
- நடைத்திறன் பயிற்சி (Gait Training)
- ஒருங்கிணைப்புப் பயிற்சி (Co-Ordination Training)
நரம்பு சார்ந்த நோய்கள் ஏற்படும்போது, நோய் பாதிப்பின் நிலையைப் பொறுத்து உடற்பயிற்சிகள் மூலமாகவும், சாதனங்கள் உதவியுடனும் தொடர் சிகிச்சையளிக்கப்படும். வலுவிழந்த தசைகளையும் நரம்புகளையும் மீண்டும் வலுவடையவைப்பது, அவற்றின் செயல்திறனை அதிகரிக்கச் செய்வது ஆகியவைதான் பிசியோதெரபியின் முக்கிய வேலை. நரம்பு சார்ந்த பாதிப்புகள் முதியோருக்கு வராமலிருக்க சுடோகு, செஸ், குறுக்கெழுத்து போன்ற விளையாட்டுகளை விளையாடுவதுடன், மூளையை எப்போதும் ஏதாவதொரு செயலில் ஈடுபடுத்த வேண்டும். இந்த முறைக்குப் பெயர் `பிரெய்ன் ஜிம்’ (Brain Gym) எனப்படுகிறது. மூளையின் நினைவுத்திறனை அதிகப்படுத்த நமக்கு நாமே கேள்விகளைக் கேட்டு, பதிலளிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாகச் செய்வதன் மூலம் ஞாபகமறதியிலிருந்து விடுபடலாம்.
3.இதயம் மற்றும் சுவாச பிசியோதெரபி (Cardio Respiratory Physiotherapy)
கார்டியோ ரெஸ்பிரேட்டரி துறையில், பிசியோதெரபியின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். இதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
* ஆஸ்துமா, எம்பைசீமா (Emphysema) போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் மூச்சுவிட சிரமப்படுவார்கள். அவர்களுக்கு இருமல் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் அவர்களுக்கு மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சிகளைப் பயிற்றுவித்து, அவர்களது பலவீனமான தோள்பட்டை மற்றும் தசைகளை வலுப்படுத்தி, அறுவை சிகிச்சை செய்யாமலேயே மூச்சுவிடும் திறனை மேம்படுத்துவார்கள்.
* இதயம் மற்றும் மார்புப் பகுதியில் பெரிய அளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது இதயம், நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்துவதில் பிசியோதெரபியின் பங்கு மகத்தானதாகும். அறுவை சிகிச்சை முடிந்ததும், மார்புப் பகுதியில் சளி கட்டக் கூடாது. இதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருடன் இணைந்து பிசியோதெரபி மருத்துவர் செயல்பட்டு மார்புச்சளியைத் தொடர்ந்து வெளியேற்றுவார். அறுவை சிகிச்சை முடிந்ததும், நடை பழக்கவும் (Gait
Training), பலவீனமான தசைகளை வலுவூட்டவும் பயிற்சியளிப்பார்கள்.
4.விளையாட்டு பிசியோதெரபி (Sports Physiotherapy)
விளையாட்டு வீரர்களுக்குத் தசை மற்றும் தசைநார்க் காயங்கள் ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளது. அண்மைக்காலமாக, கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் பிரச்னைகளைைத் தீர்க்க`ஆன் ஃபீல்டு’, `ஆஃப் ஃபீல்டு’ என இரண்டுவிதமான பிசியோதெரபிகள் இருக்கின்றன.
விளையாட்டு வீரர்களுக்கு மைதானத்தில் காயம் ஏற்படும்போது உடனடியாக முதலுதவியளித்து, அவர்களைத் தயார்படுத்தி, விளையாட வைப்பது `ஆன் ஃபீல்டு ட்ரீட்மென்ட்’ ஆகும். மைதானத்தில் காயம்பட்ட வீரருக்குச் சிகிச்சையளித்து, அந்தக் காயத்தை முழுமையாக ஆறச்செய்து, இழந்த தசை மற்றும் தசைநார்களின் வலிமையை மீண்டும் பெறவைப்பது `ஆஃப் ஃபீல்டு ட்ரீட்மென்ட்’ ஆகும்.
விளையாட்டு வீரர்கள் தகுந்த பிசியோதெரபிஸ்ட்டின் துணையுடன் `வார்ம் அப்’ (Warm Up) மற்றும் `கூல் டவுண்’ (Cool Down) பயிற்சிகளைச் செய்வார்கள்.
5.கைகளுக்கான பிசியோதெரபி (Hand Physiotherapy)
இந்தத் துறை பற்றி பலருக்கும் தெரியாது. ஆனால், மிகவும் இன்றியமையாத துறை. தொழிற்சாலை விபத்துகளில் கைகள் நசுங்குவது, சாலை விபத்துகளில் கையில் கடுமையாகக் காயம் ஏற்படும் போது தொழில்முறை மருத்துவர் அல்லது அறுவை சிகிச்சை நிபுணர் தகுந்து சிகிச்சையளித்து கட்டுப் போடுவார்கள். பிறகு பிசியோதெரபிஸ்ட் அளிக்கும் தொடர் பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள்தான் அந்தத் தசை மற்றும் நரம்புகளை மீண்டும் வலிமையாக்கி, அடிபட்ட கையை மீண்டும் பழையபடி செயல்படவைக்கும். தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் `PPE’ (Personal Protective Equipment) எனப்படும் தற்காப்புச் சாதனங்களுடன் பணிபுரிய வேண்டும். சிலருக்கு கை விரல்களில் முடக்குவாதம் ஏற்பட்டிருக்கும். முடக்குவாதம் வந்தவர்களால் விரல்களை அசைக்க முடியாது. கல் உப்பை வெந்நீரில் போட்டு, கையை அதில் நனைத்து, பஞ்சு போன்ற பந்தை கைக்குள் வைத்து நன்றாக அமுக்க வேண்டும். தினமும் இதுபோல இரண்டு தடவை செய்தால், கை விரல்களின் அசைவுகள் மேம்படும்.
6.சமுதாயத்துக்கான பிசியோதெரபி (Community Physiotherapy)
ஒரு நோயோ அல்லது குறைபாடோ வரும் முன்னரே போதுமான விழிப்புஉணர்வை ஏற்படுத்தி முன்னெச்சரிக்கைப் பயிற்சியளிப்பதுதான் இந்தச் சிகிச்சையின் நோக்கம். கிராமப்புறங்களில் என்ன நோய் என்று தெரியாமலேயே, தங்களுக்குத் தெரிந்த சிகிச்சையைச் சிலர் செய்துகொள்வார்கள். அவர்களுக்குப் போதிய விழிப்புஉணர்வு மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்துவதே சமுதாயம் சார்ந்த பிசியோதெரபியாகும்.
7.குழந்தைகளுக்கான பிசியோதெரபி (Pediatrics Physiotherapy)
பிறவி (Congenital) மற்றும்வளரும் பருவத்தில் குழந்தைக்கு ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றுக்கான சிகிச்சை இது.
சில குழந்தைகளுக்குப் பிறவியிலேயே ஏற்படும் நோய், மூளை முடக்குவாதம். இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இயல்பான மனப் பக்குவமும் மூளை வளர்ச்சியும் இருக்காது. அவர்களின் உடல் தசைகள் பலவீனமடைந்து காணப்படுகிறது. இத்தகைய குழந்தைகளுக்கு `நியூரோ டெவலப்மென்ட் தெரபி’ (Nuero Development Therapy), `மோட்டார் ரீலேர்னிங் புரோகிராம் மற்றும் போபாத் டெக்னிக்’ (Motor Relearning Program and Bobath Technique) போன்ற பயிற்சிகளை அளித்தால், அவர்களுடைய பலவீனமான தசைகள் வலுப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளின் மூலம் அவர்களை நிற்க, நடக்கவைக்க முடியும்.
குழந்தைகள் விபத்துக்குள்ளாகும் போது அவர்களின் உடல் தசைகளும் எலும்புகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அதிலிருந்து அவர்கள் மீளவும், நோய் பாதிப்புகள் மற்றும் `ஹெமிப்லெஜிக் ஸ்ட்ரோக்’ (Hemiplegic Stroke) போன்ற பாதிப்புகளிலிருந்து மீளவும் பிசியோதெரபி கைகொடுக்கிறது. வளரும் வயதில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளின் வாழ்க்கைத்திறனை மேம்படுத்த பிசியோதெரபி பெரிதும் உதவுகிறது.
தற்காலத்தில், சிறு வயதில் ஓடியாடி விளையாடாமல் ஒரே இடத்தில் இருப்பது போன்றவற்றால் குழந்தைகளுக்கு அதிகளவில் `ஜுவைனைல் டயாபடிஸ்’ (Juvenile Diabetes), `ஜுவைனைல் ஒபிசிட்டி’ (Juvenile Obesity) போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பாதிப்புகள் ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால், குழந்தைகள் சத்தான காய்கறிகளை உண்ண வேண்டும். அதேபோல் செல்போன்களில் நேரத்தைச் செலவிடுவதற்கு பதில், ஓடியாடி விளையாடுவது அவசியமான ஒன்றாகும்.
8.முதியோருக்கான பிசியோதெரபி (Geriatric Physiotherapy)
முதுமையால் ஏற்படும் நோய்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் தொடர்பான பிசியோதெரபிப் பிரிவாகும் இது. வயதானோருக்கு இதயம், சுவாசம், தசை, மூட்டு மற்றும் நரம்பு சார்ந்த பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அந்தப் பிரச்னைகள் மற்றும் நோய்களிலிருந்து காத்துக்கொள்ளவும், அவற்றிலிருந்து விடுபடவும் இந்தச் சிகிச்சையளிக்கப் படுகிறது.
வயது மூப்பு காரணமாக ஞாபகமறதி, கவனச் சிதைவு, கண் பாதிப்புகள், பார்வைத்திறன் குறைவதால் நடக்கும் திறன் பாதிப்பு, மூட்டுத் தேய்மானம், முதுகுத்தண்டுவட பாதிப்பு, ஆண்களுக்கு புரோஸ்டேட் (Prostate) புற்றுநோய், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன. இந்த நோய்களின் தாக்கத்தைக் குறைக்க, வயதானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும்.
முதியோரை கஷ்டப்படுத்தாமல், அவர்களால் செய்ய முடிந்த சிறு சிறு உடற்பயிற்சிகளைக்கொண்டு அவர்களின் செயல்திறன் மேம்படுத்தப்படும். படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு படுக்கைப்புண் ஏற்படாதபடி சிகிச்சையளிக்கப்படும். சுவாசப்பயிற்சி தருவதன் மூலம் சுவாசத்தை மேம்படுத்தலாம் மற்றும் பயன்படுத்தப்படாத தசைகள் செயலிழக்காமல் தவிர்க்க, போதுமான அசைவுகள் அளிக்கப்படும். மேலும் அவர்களை முழு கவனத்துடன் நடக்கவைக்கவும் கீழே விழாமல் இருக்கவும் போதுமான பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால், முதியோரின் வாழ்க்கைமுறை மேம்படுத்தப்படுகிறது.
9.மகப்பேறியல் பிசியோதெரபி (Obs tetrics and Gynaecology Physiotherapy)
அண்மைக்காலமாக வளர்ந்துவரும் துறை இது. பிரசவத்துக்கு முன்னரும், பிரசவத்துக்குப் பின்னரும் கடைப்பிடிக்கவேண்டிய இந்தப் பயிற்சிகள் பிசியோதெரபிஸ்ட்டால் சொல்லித் தரப்படுகிறது. கருவுற்ற பெண், சுகப்பிரசவம் காண எந்தெந்தப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், எப்படிப்பட்ட வாழ்க்கைமுறையை மேற்கொள்ள வேண்டும் போன்ற வழிமுறைகளைப் பயிற்றுவிப்பது `ப்ரீநேட்டல் கேர்’ (Prenatal Care) என்னும் பிசியோதெரபியாகும். பிரசவத்துக்குப் பிறகு இடுப்புப் பகுதியில் தசைகள் தளர்ந்துவிடும். சிலருக்கு முதுகுவலி ஏற்படும். தளர்ந்த தசைகளை இயல்புநிலைக்கு மாற்றி, வலியைப் போக்கும் உடற்பயிற்சிகள், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, தாய்ப்பால் கொடுக்கும் முறை என பிரசவத்துக்குப் பிறகு செய்யவேண்டிய பயிற்சிகளை அளிப்பது `போஸ்ட்நேட்டல் கேர்’ (Postnatal Care) சிகிச்சையாகும்.
10.உடல் இயக்கவியல் (Biomechanics)
நம் உடலின் ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட தசைத் தொகுதி காரணமாக இருக்கிறது. அந்தத் தசைகளை எப்படி வலிமையடையச் செய்வது, மேம்படுத்துவது என்பது குறித்த பிசியோதெரபி இது. ஒரு செயலை எப்படிச் செய்தால் எளிமையாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும் என்று இந்த முறையில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. தசை அசையும் திறனை மேம்படுத்துவது, உடல் அமைப்பைத் தக்கவைத்துக்கொள்ள உதவுது ஆகியவைதான் இந்தச் சிகிச்சையின் நோக்கமாகும். இதன் மூலம் வலி இல்லாமல் ஒரு செயலை எளிதாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும். இந்தத் துறையில் வளர்ந்துவரும் ஒரு பிரிவுதான் `பணிச் சூழலியல்’ (Ergonomics). பணியிடங்களில் ஒரு வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் ஒரு வழிமுறையாகும். மூப்படைவதற்கு முன்னரே பணிச்சூழல் காரணமாக முதுகுவலி, மூட்டுவலி, கழுத்துவலி போன்றவை பலருக்கும் ஏற்படுகின்றன. நம்மை வருத்திக்கொள்ளாமல் எப்படி வேலை செய்வது என்று கற்றுக்கொடுக்கிறது இந்த சிகிச்சை முறை.
11.மறுவாழ்வு பிசியோதெரபி (Rehabilitation Physiotherapy)
பிறவி ஊனமுற்றோர், விபத்து மூலம் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், உடல் அசைவுக் குறைபாடு உள்ளவர்களின் மறுவாழ்வுக்காக அளிக்கப்படும் சிகிச்சையாகும். உதாரணமாக, விபத்தில் காலிழந்த ஒருவருக்குச் செயற்கைக் கால் பொருத்தி, அதன் மூலம் அவர் இயல்பாக நடக்கவும், அதை அவரது வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றவும் போதுமான பயிற்சி அளிப்பதுதான் இந்த பிசியோதெரபியின் முக்கியப் பணியாகும்.

0 Comments