| இறுதிபோட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா |
துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ரிஸ்வான் 67 ரன்களும் மற்றும் ஃப்கர் ஜமான் 55* ரன்களும் எடுத்தனர்.
இதன் பின் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் பின்ச் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து மிகப்பெரும் பின்னடைவை கொடுத்தார்.
பிறகு வந்த மிட்செல் மார்ஸ் (28), ஸ்டீவ் ஸ்மித் (5) மற்றும் கிளன் மேக்ஸ்வெல் (7) ஆகியோரும் ஆஸ்திரேலிய அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னரும் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது கவனக்குறைவால் வெளியேறினார்.
முக்கிய வீரர்களின் விக்கெட்டை அடுத்தடுத்து கைப்பற்றிவிட்டதால் பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றி பெறும் என கருதப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஸ்டோய்னிஸ் மற்றும் மேத்யூ வேட் கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது.
இந்நிலையில் ஷாகின் அப்ரிடி, போட்டியின் 19வது ஓவரை வீசினார். ஷாகின் அப்ரிடியின் அதிரடியான பந்துவீச்சில், பயமே இல்லாத ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ வேட், ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசி 19வது ஓவரிலேயே தனது அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார்.
இதன் மூலம் இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. துபாயில் நாளை மறுதினம் நடக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் யார் வெற்றி பெற்றாலும் அந்த அணிக்கு இதுவே முதலாவது 20 ஓவர் உலக கோப்பையாக இருக்கும்.

0 Comments